மகப்பேறுக்கு முன்னரான கவனிப்பு மற்றும் ஆரோக்கியமான கர்ப்பகால நடைமுறைகள் | The Family Planning Association of Sri Lanka

மகப்பேறுக்கு முன்னரான கவனிப்பு மற்றும் ஆரோக்கியமான கர்ப்பகால நடைமுறைகள்

உங்கள் கர்ப்ப காலம் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பதற்கான வழிகாட்டி

  1. மகப்பேறுக்கு முன்னரான கவனிப்பு / முன்பேறுகால கவனிப்பு (Prenatal Care) என்றால் என்ன?

மகப்பேறுக்கு முன்னரான கவனிப்பு என்பது கர்ப்ப காலத்தில் நீங்கள் பெறும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆதரவைக் குறிக்கிறது. இந்தப் பரிசோதனைகள் உங்கள் ஆரோக்கியத்தையும் உங்கள் குழந்தையின் வளர்ச்சியையும் கண்காணிக்கவும், ஏற்படக்கூடிய அபாயங்களை முன்கூட்டியே கண்டறியவும், தேவையான நேரத்தில் முறையான சிகிச்சையை உறுதி செய்யவும் உதவுகின்றன.

வழக்கமான முன்பேறுகால கவனிப்பு, ஆரோக்கியமான கர்ப்பத்திற்கும் பாதுகாப்பான பிரசவத்திற்கும் வழிவகுக்கும்.

  1. நான் எப்போது மகப்பேறுக்கு முன்னரான பராமரிப்பைத் தொடங்க வேண்டும்?

நீங்கள் கர்ப்பமாக இருப்பதை அறிந்தவுடன், அதாவது முதல் 8 வாரங்களுக்குள், மகப்பேறுக்கு முன்னரான பராமரிப்பைத் தொடங்க வேண்டும். முன்கூட்டியே பதிவு செய்வது சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்களுக்குப் பின்வருவனவற்றைச் செய்ய உதவுகிறது:

  • கர்ப்பத்தை உறுதிப்படுத்துதல்
  • உங்கள் பிரசவத் திகதியைக் கணித்தல்
  • ஏற்கனவே உள்ள உடல்நலக் குறைபாடுகளைக் கண்டறிதல்
  • ஆரம்பகால ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை வழிகாட்டுதலை வழங்குதல்
     

உங்களுக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், தைரோய்ட் பிரச்சனைகள் அல்லது முந்தைய கர்ப்பத்தில் சிக்கல்கள் இருந்திருந்தால், ஆரம்பகால பராமரிப்பு மிகவும் அவசியம்.

  1. நான் எவ்வளவு காலத்திற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும்?

பொதுவாக:

  • 28 வாரங்கள் வரை: மாதத்திற்கு ஒரு முறை.
  • 28–36 வாரங்கள் வரை: இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை.
  • 36 வாரங்களுக்குப் பிறகு: பிரசவம் வரை வாரத்திற்கு ஒரு முறை.
     

உங்கள் தனிப்பட்ட உடல்நலத் தேவைகளைப் பொறுத்து, உங்கள் சுகாதார வழங்குநர் அடிக்கடி பரிசோதனைக்குச் செல்லப் பரிந்துரைக்கலாம்.

  1. மகப்பேறுக்கு முன்னரான பரிசோதனையின் போது என்ன நடக்கும்?

வழக்கமான பரிசோதனைகளின் போது, ​​உங்கள் சுகாதாரப் பராமரிப்பாளர்மருத்துவர் பின்வருவனவற்றைச் செய்யலாம்:

  • உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் எடையைச் சரிபார்த்தல்.
  • குழந்தையின் வளர்ச்சி மற்றும் இதயத் துடிப்பைக் கண்காணித்தல்.
  • இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகள்.
  • இரத்த சோகை அல்லது கர்ப்பகால நீரிழிவு போன்றவற்றை கண்டறிதல்.
  • ஊட்டச்சத்து, துணை உணவுகள் மற்றும் உடற்பயிற்சி குறித்து ஆலோசனை வழங்குதல்.
     

மகப்பேறு தொடர்பில் உங்களுக்கு ஏற்படும் கேள்விகளைக் கேட்பதற்கும், ஏதேனும் கவலைகளைப் பற்றி கலந்துரையாடுவதற்கும் இந்தப் பரிசோதனைகள் ஒரு நல்ல வாய்ப்பாகும்.

  1. கர்ப்ப காலத்தில் நான் என்ன சாப்பிட வேண்டும்?

ஒரு சமநிலையான உணவு உங்கள் ஆரோக்கியத்திற்கும் உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கும் துணைபுரிகிறது. எனவே பின்வருவனவற்றில் கவனம் செலுத்துங்கள்:

  • புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள்.
  • முழு தானியங்கள்.
  • மீன், முட்டை, பருப்பு வகைகள் மற்றும் கொழுப்பு குறைந்த இறைச்சி போன்ற புரத மூலங்கள்.
  • பால் பொருட்கள் அல்லது கல்சியம் நிறைந்த உணவுகள்.
     

உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி, பிரசவத்திற்கு முன்பும் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்திலும் ஃபோலிக் அமிலத்தை (தினமும் 400 mcg) எடுத்துக்கொள்வதுடன், இரும்புச்சத்து மற்றும் பிற துணை உணவுகளையும் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.

எப்போதும் நீரேற்றத்துடன்(Hydrated) இருபத்தோடு, சரியாக வேகவைக்கப்படாத உணவுகள் அல்லது கிருமி நீக்கம் செய்யப்படாத பொருட்களைத் தவிர்க்கவும்.

  1. கர்ப்ப காலத்தில் நான் உடற்பயிற்சி செய்யலாமா?

ஆம், உங்கள் மருத்துவர் வேண்டாம் என்று சொல்லாத வரை, மிதமான உடற்பயிற்சி பாதுகாப்பானது மற்றும் நன்மை தரக்கூடியது. நடைப்பயிற்சி, மகப்பேறு கால யோகா மற்றும் மென்மையான நீட்சிப் பயிற்சிகள் (Stretching) போன்றவை:

  • இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
  • மன அழுத்தத்தைக் குறைக்கும்.
  • எடையைப் பராமரிக்க உதவும்.
  • பிரசவத்திற்கு உங்கள் உடலைத் தயார்படுத்தும்.
     

உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு அல்லது தொடர்வதற்கு முன்பு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

  1. கர்ப்ப காலத்தில் நான் எவற்றைத் தவிர்க்க வேண்டும்?

உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க:

  • புகைப்பிடிப்பதையும், மற்றவர்கள் பயன்படுத்தும் புகையிலை புகையைச் சுவாசிப்பதையும் தவிர்க்கவும்.
  • மது மற்றும் போதைப்பொருட்களைத் தவிர்க்கவும்.
  • காஃபின்(Caffeine) உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தவும்.
  • மருத்துவ ஆலோசனையின்றி சுயமாக மருந்து எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கவும்.
     

எந்தவொரு மருந்தையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு எப்போதும் ஒரு சுகாதார நிபுணரை அணுகவும்.

  1. கர்ப்ப காலத்தில் ஏற்படும் அபாய அறிகுறிகள் யாவை?

பின்வரும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடவும்:

  • கடுமையான வயிற்று வலி.
  • அதிகப்படியான யோனிவழி இரத்தப்போக்கு.
  • தொடர்ச்சியான கடுமையான தலைவலி.
  • மங்கலான பார்வை.
  • முகம் அல்லது கைகளில் வீக்கம்.
  • குழந்தையின் அசைவு குறைதல் (கர்ப்பத்தின் பிந்தைய காலத்தில்).
  • அதிக காய்ச்சல்.
     

எச்சரிக்கை அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவது பின்னர் ஏற்படக்கூடிய கடுமையான சிக்கல்களைத் தடுக்க உதவும்.

  1. கர்ப்ப காலத்தில் உளநலம் ஏன் முக்கியமானது?

ஹோர்மோன் மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் கர்ப்ப காலத்தில் உணர்ச்சி ரீதியான மாற்றங்கள் ஏற்படலாம். கவலை, மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு ஏற்படுவது சாதாரணமானதாகும் . இருப்பினும், தொடர்ச்சியான சோகம், அதீத கவலை அல்லது அன்றாட நடவடிக்கைகளில் ஆர்வமின்மை போன்றவை பிரசவத்திற்கு முன்னரான மன அழுத்தத்தைக் குறிக்கலாம்.

ஒரு சுகாதார நிபுணர் அல்லது ஆலோசகரிடம் பேசுவது உங்களுக்குத் தேவையான ஆதரவை வழங்கும். உடல் ஆரோக்கியத்தைப் போலவே உள ஆரோக்கியமும் முக்கியமானது.

  1. இலங்கை குடும்பத்திட்டமிடல் சங்கம்(FPA ஸ்ரீலங்கா) எனக்கு எவ்வாறு ஆதரவளிக்க முடியும்?

FPA ஸ்ரீலங்கா, உங்கள் கர்ப்ப காலம் முழுவதும் உங்களுக்கு ஆதரவளிக்க, இரகசியமான, தொழில்முறை வழிகாட்டுதலையும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளையும் வழங்குகிறது.

உங்களுக்குக் கேள்விகள் இருந்தாலோ அல்லது தனிப்பட்ட ஆலோசனை தேவைப்பட்டாலோ, 076 588 4881 / 076 588 4882 எனும் இலக்கங்களினூடாக தொடர்புகொள்ளவும், வாட்ஸ்அப் செய்யவும் முடியும்.

சந்திப்புக்கு முன்பதிவு செய்ய: Bloom by FPA ஸ்ரீலங்காவை 0779552979 தொடர்புகொள்ளவும், வாட்ஸ்அப் செய்யவும் முடியும்.
 

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2026 | Family Planning Association All Rights Reserved
As Imagined By